தமிழ் சினிமாவில் அட்டகாசமான நடிகரும் முன்னணி ஸ்டாருமான சரத்குமார் அவர்கள் ஒரு காலத்தில் பல முன்னணி இயக்குனருடன் கூட்டணி அமைத்து பல பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்களை கொடுத்து வந்தார். ரஜினி கமல், விஜயகாந்த் என்று இருந்த போதே அந்த வரிசையில் இடம் பிடித்தார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இடையே சில காரணங்களினால் திரைப்படங்களில் நடிப்பதில் விலகி இருந்த சரத் குமார் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவருடைய இரண்டாவது இன்னிங்க்ஸ் வெற்றிகரமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு இயக்குனர் மணி ரத்னம் அவரின் இயக்கத்தில் உருவாகி உலகளவில் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான ‘பெரிய பழுவேட்டையராயர்’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதை தொடர்ந்து இந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’, பொன்னியின் செல்வன் பாகம் 2, கஸ்டடி ஆகிய படங்களில் நடித்து தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது அவர் கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள் மற்றும் நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி நாளை வெளியாகவிருக்கும் போர் தொழில் திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் அவருடன் இணைந்து நடித்துள்ளார் சரத் குமார். கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சரத்குமார் மூத்த காவலதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அசோக் செல்வன், சரத் குமார் இவர்களுடன் இணைந்து நிக்கிலா விமல், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் ஜேக்ஸ் பிஜாய் போர் தொழில் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தொடர் கொலைகளை சரத் குமார் மேற்பார்வையில் அசோக் செல்வன் உடன் சேர்ந்து கண்டறியும் கதைக்களமாக போர் தொழில் உருவாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் போர் தொழில் திரைப்படத்தின் அமைந்துள்ள மிக முக்கியமான காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு பெண் மர்ம நபரால் கடத்தப்பட இதனை அறிந்து சரத்குமார் அசோக் செல்வன் தனிப்படையுடன் விரைந்து செல்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த திரில் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.