அசோக் செல்வன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் கேங்ஸ் வெப் சீரிஸ் குழுவினர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் போர் தொழில். வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்து இந்த 2023 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தற்சமயம் அறிமுக இயக்குனர் CS.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் சபா நாயகன் படத்தில் நடித்து வருகிற அசோக் செல்வன், முன்னதாக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் கேங்ஸ் எனும் புதிய வெப்சீரிஸில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் கிராபிக் டிசைனராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றி பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தை இயக்கி முதல் முறை இயக்குனராக களமிறங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தையும் இயக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராக தனது மே 6 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கோவா திரைப்படத்திற்கு பிறகு அடுத்த படைப்பாக கேங்ஸ் எனும் புதிய வெப்சீரிஸை சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். நோஹா ஆபிரகாம் எழுதி இயக்கும் இந்த கேங்ஸ் வெப் சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் வெப் சீரிஸின் குழுவினர் தற்போது படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். சௌந்தர்யா ரஜினிகாந்த், அசோக் செல்வன் மற்றும் இயக்குனர் நோஹா ஆபிரஹாம் உள்ளிட்ட குழுவினர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று தற்போது படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது அணி " The One and Only" இடம் வெப் சீரிஸுக்காக ஆசிகள் பெற்றுள்ளது. நன்றி தலைவா! நன்றி சூப்பர் ஸ்டார்! நன்றி என் அன்பான அப்பா!” எனக் குறிப்பிட்டு தனது குழுவோடு ரஜினிகாந்த் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…