2007 ம் ஆண்டு அஜித் குமாரை வைத்து ‘கிரிடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.எல் விஜய். முதல் படத்திலே பெரிய நடிகரை கச்சிதமாக கையாண்டு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார் இயக்குனர் விஜய். அதன் பின் பிரம்மாண்டமான தயாரிப்பில் நடிகர் ஆர்யா மற்றும் ஹாலிவுட் நடிகை ஏமி ஜாக்சன் வைத்து ‘மதராசப்பட்டினம் திரைப்படத்தை இயக்கினார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அடிப்படையாக வைத்து அட்டகாசமான காதல் கதையாக வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவை இயக்குனர் விஜய் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின் தெய்வதிருமகள் படத்தில் விக்ரம் நடிப்பு திறமையை முழுவதும் பயன்படுத்தி அசத்தியிருப்பார் இயக்குனர் விஜய். தொடர் வெற்றிகளை பெற்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் உயர்ந்தார் இயக்குனர் விஜய். அதன்பின் நிறைய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தார். சமீபத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக ‘தலைவி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் லண்டன் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்படும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’ இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். மும்முரமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றோடு முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தின் இறுதி நாட்களை கேக் வெட்டி முடித்துள்ளனர் படக்குழு. ரத்த காயங்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மற்றும் மாடல் பரத் போபன் மற்றும் நடிகை நிமிஷா, இயக்குனர் விஜய் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஸ்டன்ட் சில்வா ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன் “இயக்குனர் விஜயுடன் பயணித்தது அருமையாக இருந்தது. நிமிஷா, ஏமி ஜாக்சன், ஸ்டன்ட்சில்வா மற்றும் இயக்குனரின் பிரம்மாண்ட சிந்தனையை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அருண் விஜய் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வரும் மே மாதம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்திய திரைப்படமாக வெளியட படக்குழு திட்டமிட்டுள்ளது.வரும் மே மாதம் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். பழைய நிலைக்கு இயக்குனர் விஜயின் படங்களாக இது இருக்குமா என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.