மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய அரசியல் பிரமுகர் தலைமறைவாகி உள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரிக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிவசங்கரி, சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததால், இவரை விட்டுப் பிரிந்த இவரது கணவர், மற்றொரு பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

இதனால், சிவசங்கரி தனது மகனுடன், தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சிவசங்கரியை ஏமாற்றி வெளியே அழைத்துச் சென்ற அவரது பெரியப்பா செல்வராஜ், அருகில் உள்ள முந்திரிக்காட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சிவசங்கரி 6 மாதம் கர்ப்பிணியான நிலையில், இந்த விசயம் அவரது தாயாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் சிவசங்கரியின் தாயார் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை, தேடி வருகின்றனர்.

இதனிடையே மனநலம் பாதிக்கப்பட்ட சிவசங்கரியை பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அவரின் பெரியப்பா செல்வராஜ், அதிமுக ஒன்றிய பொருளாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.