இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் AR.முருகதாஸ் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் நல்ல நல்ல படைப்புகளை தயாரித்து வருகிறார். அந்த வகையில், இவரது தயாரிப்பில் இயக்குனர் NS.பொன்குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தனது பயணத்தின் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

“தற்போது வெளிவர இருக்கும் 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தின் ஸ்கிரிப்டை படிக்கும் போதே இது ரசிகர்களிடையே சென்றடையும் வர்த்தக ரீதியாக வெற்றி அடையும் என்ற சரியான கணிப்பு இருக்கிறது. இந்த கணிப்பு சில நேரங்களில் தவறாகிறது...நீங்கள் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் அந்தப் படங்களும் இந்த கணிப்ப்பில் சரியாக வெற்றி அடையும் என செய்தது தான்.. வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் சில நேரங்களில் வெற்றி அடைவதில்லை.. உதாரணத்திற்கு ஸ்பைடர், தர்பார்.. அது ஏன் அந்த மாதிரி ஆகிறது?" எனக் கேட்ட போது,

“ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஜெயிப்பதற்கு ஒரு காரணம் இருக்கும் போது தோற்பதற்கும் ஒரு காரணம் இருக்கும். இதில் என்னவென்றால் எல்லா படமும் நமக்கு முதல் படம் என்பது போல, அந்தக் கதை நமக்கு முதல் கதை தான். அது ஒரு புது அனுபவம் தான். உதாரணத்திற்கு ஸ்பைடர் படத்தை எடுத்துக் கொள்வோம் அதில் நான் ஒரு கணக்கு போட்டேன். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் சரியாக இருக்க வேண்டும். அப்போது பெரிய பேன் இந்தியா என்ற கான்செப்ட் வரவில்லை. அப்போது நான் நினைத்தது இங்கே SJ.சூர்யா அங்கே மகேஷ் பாபு இருக்கும்போது இங்கே SJ.சூர்யாவிற்காக படம் பார்ப்பார்கள் அங்கே மகேஷ்பாபுவிற்காக படம் பார்ப்பார்கள் என நினைத்தேன். அந்தக் கணக்கில் இங்கே ஒரு பெரிய கமர்சியல் ஹீரோ மாதிரி மகேஷ் பாபுவை காட்ட முடியாது. அதனால் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் ஷட்டிலாக வைத்தேன். அதனால் அங்கே என்ன ஆகிவிட்டது என்றால் இவ்வளவு பெரிய ஹீரோவை அங்கே ஒரு தமிழ் இயக்குனர் வேண்டுமென்றே இப்படி செய்து விட்டார். SJ.சூர்யா அவரது நண்பர் என்பதற்காக அவரை பெரிதாக காட்டிவிட்டார். என அங்கே படத்தை கொஞ்சம் ஒதுக்கி விட்டார்கள். அந்த மாதிரி தான்… என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஜெயிக்கும் படத்திற்கு என்ன உழைப்பு போடுகிறோமோ அதே தான் சுமாராக போன படத்திற்கும் போட்டு இருக்கிறேன்.

தர்பார் திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் ஒரு கட்டத்திற்கு மேல் என்ன ஆகிவிட்டேன் என்றால் நமக்கு படம் செய்வதும் ஸ்கிரிப்ட் எழுதுவதும் முழுவதுமாக வந்துவிட்டது என என்னை பற்றி எனக்கே ஒரு தவறான புரிதல் இருந்தது. அதனால் நான் என்ன செய்து விட்டேன் என்றால், ரஜினி சார் ஒரு டேட் சொல்கிறார். மார்ச் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். ஜூன் மாதத்தில் பாம்பேவில் மழைக்காலம் ஆரம்பித்து விடும்... ஆகஸ்ட் மாதத்தில் அவர் கட்சி ஆரம்பிக்கிறார். இந்த நேரத்திற்குள் முடிக்க நான் பிப்ரவரியில் ஷூட்டிங் போக வேண்டும். நான் வெறிபிடித்த ரஜினி ரசிகன். அதனால் எந்த காரணம் கொண்டும் இந்த படத்தை இழக்க நான் விரும்பவில்லை. அன்றைக்கு அந்த படம் ரஜினி சாரோட கடைசி படம் என்பது போல பேசப்பட்டது. ஏனென்றால் அவர் அரசியலுக்குள் வரப் போகிறார் என இருந்தது. நான் தொடங்கலாம் என சொன்னது பிப்ரவரியில், ஆனால் படப்பிடிப்பு சென்றது மார்ச் மாதத்தில்... ஆனால் ஜூன் மாதத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும் என இருந்தது. அதனால் எப்படியாவது ரஜினி சாரை வைத்து ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும். இந்த படத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு கணக்கு போட்டேன். அதுதான் மிகவும் தவறாகிவிட்டது. சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் அது தப்பாகும். படப்பிடிப்பிற்கு முன்பு ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு சரியான திட்டமிடுதல் என்பது வேண்டும். நான் அந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதை மட்டும் வைத்துக் கொண்டேன். ஆமீர் கான் ஒரு முறை பெரிய ரகசியம் சொன்னார். அது என்னவென்றால், “ஒரு திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அதன் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டால் அந்த திரைப்படம் அப்போதே 50 சதவீதம் தோல்வி அடைந்து விடுகிறது.” என சொன்னார் அதை உண்மை என இந்த படத்தின் போது நான் உணர்ந்து கொண்டேன். எனவே வேறு எந்த காரணங்களுக்காகவும் நாம் ஒரு இயக்குனர் என்பதை விட்டே கொடுத்து விட கூடாது அது ஒரு ஹீரோ மேல் இருக்கும் ஆசையோ? அல்லது பெரிய சம்பளமோ? அதில் நாம் எங்கும் சறுக்கி விடக்கூடாது என்பதை நான் அதிலிருந்து கற்றுக் கொண்டேன்." என தெரிவித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அந்த முழு பேட்டி இதோ…