மலையாள சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் மெகா ஹிட்டாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த கோல்ட் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களை பெற்ற கோல்ட் திரைப்படம் பிரேமம் திரைப்படம் அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.

இதனை அடுத்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனையும் கோல்ட் திரைப்படத்தையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நெட்டிஸன்கள் ட்ரோல் செய்து வந்தனர். மேலும் பல விதமான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தன. இநநிலையில் இவை அனைத்திற்கும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில், கோல்ட் படத்தை பார்த்து நீங்கள் என்னையோ என் படத்தையோ உங்களது திருப்திக்காக எவ்வளவு தவறாக பேசினாலும் ட்ரோல் செய்தாலும் அது உங்களுக்கு மட்டும்தான். அது எந்த விதத்திலும் என்னை பாதிக்காது. உங்கள் அனைவரது விமர்சனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இருந்து என்னுடைய “PROFILE PICTURE”-ஐ நீக்கி இருக்கிறேன். நான் உங்களின் அடிமை அல்ல, பொதுவெளியில் என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை கிடையாது. அதனால் என் படங்களை பிடித்திருந்தால் மட்டும் நீங்கள் பாருங்கள். எனது சமூக வலைதள பக்கங்களில் உங்களது கோபத்தை காட்டாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் நான் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விடுவேன். நான் முன்பு போல் அல்ல. நான் எனக்கும், என் மனைவி, என் குழந்தைகள், என்னை பிடித்தவர்கள், என் தோல்வியில் எனக்கு துணை நின்றவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உண்மையாக இருப்பேன். நான் தோல்வியடைந்த போது என்னை பார்த்து சிரித்த உங்கள் முகங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன். யாரும் வேண்டுமென்றே தோற்க மாட்டார்கள். அது இயற்கையாக நடப்பது. அதனால் அதே இயற்கை எனக்கு உறுதுணையாக இருந்து பாதுகாக்கும்" என பதிவிட்டுள்ளார். இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் அந்த பதிவு இதோ…