தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் நேற்று ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வீரம் மற்றும் ஜில்லா படங்களை தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக தற்போது வெளிவந்துள்ளன.

துணிவு மற்றும் வாரிசு என இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பக்கா ஆக்சன் பிளாக் என்டர்டெய்னராக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வரிசையில் ஹாட்ரிக் ஹிட்டத்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட ரிலீஸாகி இருக்கும் துணிவு திரைப்படத்தை உலகெங்கும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை நாட்கள் வருவதால் அரங்கு நிறைந்த காட்சிகளாக மக்களால் துணிவு திரைப்படம் கொண்டாடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் துணைவி படத்தை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துணிவு படத்தை மலேசியாவில் வெளியிட்டுள்ள மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இதுவரை வெளிவந்த அஜித்குமாரின் திரைப்படங்களிலேயே அதிக வசூலித்த திரைப்படமாக துணிவு திரைப்படத்திற்கு மலேசிய பாக்ஸ் ஆபிஸில் (1 மில்லியனுக்கு மேல்) அட்டகாசமான ஓப்பனிங் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.