கன்னடத்தில் கேஜிஎஃப் சாப்டர் 2, தமிழில் தளபதி விஜயின் லியோ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மற்றொரு திரையுலகில் முதல்முறையாக நடிகர் சஞ்சய் தத் களமிறங்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பல கோடி ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவராகவும் திகழும் நடிகர் சஞ்சய் தத் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முதலில் கன்னடத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் சஞ்சய் தத் மிரட்டலான வில்லனாக நடித்தார். கடந்த ஆண்டு வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தளபதி விஜயின் திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சய் தத் அவர்களின் பிறந்தநாள் பரிசாக ஸ்பெஷல் GLIMPSE of ANTONY DAS எனும் வீடியோ ஒன்றை லியோ படக்குழு வெளியிட்டது.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் நடிகர் சஞ்சய் தத் முன்னணி தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். கடைசியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்த லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தனது கம்பேக் திரைப்படமாக நடிகர் ராம் போத்திணேனியுடன் இணைந்திருக்கிறார். ஏற்கனவே பூரி ஜெகன்நாத் - ராம் போத்தினேனி கூட்டணியில் வெளிவந்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்த நிலையில் அதன் இரண்டாவது பாகமாக உருவாகும் டபுள் ஸ்மார்ட் எனும் இந்த புதிய திரைப்படத்தில் பிக் புல் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பஞ்சாபி மொழியில் களமிறங்குகிறார் நடிகர் சஞ்சய் தத். பிரபல பஞ்சாபி இயக்குனர் ஜிப்பி க்ரேவல் இயக்கத்தில் உருவாகும் புதிய பஞ்சாபி திரைப்படத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார் இந்த புதிய திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த நிலையில் இயக்குனர் ஜிப்பி க்ரேவல் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நடிகர் சஞ்சய் தத் தனது முதல் பஞ்சாபி திரைப்படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி அறிவித்திருக்கிறார். நடிகர் சஞ்சய் தத்தின் அந்த பதிவு இதோ…