தமிழ் சினிமாவில் 2008 ல் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த சுனைனா பின் தமிழில் ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘சமர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை சுனைனா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சமீபத்தில் திரைப்படங்களின் பெரிதளவு நடிக்காமல் இருந்த சுனைனா கடந்த 2019 ல் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசபட்டார். பின் தொடர்ந்து பட வாய்புகள் அவருக்கு குவிய தற்போது நடிகை சுனைனா கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி முன்னதாக அவர் நடிகர் விஷாலுடன் ‘லத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் இயக்குனர் டோமின் டிசில்வா இயக்கத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகி ‘ரெஜினா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடிகை சுனைனா காணவில்லை. அவரை யாரோ கடத்திருக்கலாம் என்றும் தற்போது அவர் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியிருந்தது. மேலும் இதனுடன் செய்தி வடிவில் ஒரு வீடியோவும் வெளியாகி பரவியது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் இதனை படத்திற்கான விளம்பரம் என்றும் சுதாரித்து கொண்டனர். இருந்தும் சுனைனா கடத்தப்பட்டதாக செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.

இந்நிலையில் தற்போது நடிகை சுனைனா கிடைத்து விட்டதாக ஒரு விளக்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை சுனைனா எனது மீது அக்கறை வைத்ததற்கு நன்றி. என் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படத்திற்காக இந்த விளம்பரம் செய்தேன் என்று பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயல்பாடு ரசிகர்களை எரிச்சலடைய செய்து போலி தகவல்களை வெளியிட்டு விளம்பரத்திற்காக பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ரசிகர்கள் தற்போது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது படக்குழுவினருக்கு பிரச்சனையாக வந்துள்ளது.