ரசிகர்களின் மனம் கவர்ந்த தொலைக்காட்சி தொடராகவும் 2010 தொடங்கி 2015 வரை வெற்றிகரமாக டாப் TRP ல் ஓடிக் கொண்டிருந்த தொடர் ‘நாதஸ்வரம்’. சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த இந்த தொடர் கடைகோடி தமிழக மக்களிடமும் சென்று அவர்களது வரவேற்பை பெற்று தனக்கான தனி இடத்தை தொலைக்காட்சி வரலாற்றில் பெற்றது. இந்த தொடரில் நடித்த நடிகர்கள் இந்த தொடரின் மூலமாகவே பலருக்கும் பரிச்சயமாகி பிரபலமாகினர். அதன்படி இந்த தொடரில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா. இந்த தொடரில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு நாதஸ்வரம் தொடரையடுத்து, ‘கல்யாண பரிசு’, ‘வாணி ராணி’, ‘பாரதி கண்ணம்மா’ போன்ற வெற்றி தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ஸ்ருதி. மேலும் சீரியல்களில் குடும்ப பெண்ணாகவும் மக்கள் மத்தியில் பாராட்ட தகுந்த கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக கொண்டவர்.

இவர் கடந்த ஆண்டு நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்தது. மேலும் இருவரது சமூக வலைதள பக்கம் எப்போது காதல் நிறைந்த தருனங்களுடன் காணப்படும். இந்த ஜோடிக்கே தனி ரசிகர் பட்டாளம் சமூக ஊடங்களில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருமணமான ஒரே ஆண்டில் ஸ்ருதி கணவர் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தி சின்னத்திரை துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த அரவிந்த் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றவர். 30 வயதே ஆகும் இவரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தார் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்ருதிக்கு ரசிகர்கள் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கணவரை இழந்த ஸ்ருதி அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன், “பிரிந்தது உடல் மட்டும் தான், ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை எப்போதும் சூழ்ந்து கொண்டு என்னை பாதுக்காக்கிறது. உங்கள் மீதான என் அன்புப் இப்போது மேலும் மேலும் அதிகரித்துள்ளது. நாம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நல்ல நினைவுகளை சேமித்து வைத்துள்ளோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகை ஸ்ருதி அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களின் ஆறுதல் வார்த்தைகளுடன் வைரலாகி வருகிறது.