தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு என இரு மொழி துறையிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். மேலும் விஜய், சூர்யா, தனுஷ், சியான் விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அதை தொடர்ந்து இந்தியில் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் இணைய தொடராக வெளியான பேமிலி மேன் 2 தொடரில் நடித்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்தார்.

பல ஆண்டுகளாக திரய்துரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா அவரது அறிய வகை நோய் பாதிப்பு காரணமாக திரைத்துறையில் தற்காலிகமாக ஒய்வு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து முழு வீச்சுடன் நடிகை சமந்தா ஒப்பந்தமாகியிருந்த படங்களில் நடித்து முடித்துள்ளார். அதன்படி விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவாகும் ‘குஷி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் செப்டம்பர் 1 ம் தேதி குஷி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து சமந்தா உலக புகழ் பெற்ற இணைய தொடரான சிட்டாடேல் தொடரின் இந்திய தயாரிப்பில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் இந்த தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார் நடிகை சமந்தா. முழுவதும் குணமடையாமல் இருந்த நிலையிலும் சமந்தா பல படங்களில் நடித்து வந்தார் இந்நிலையில் நடிகை சமந்தா வரும் ஒரு ஆண்டில் சினிமாவை விட்டு விலகி இருந்து அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை சமந்தா ஒப்பந்தமாகியிருந்த படங்களை முடித்த கையோடு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் பக்தர்களுடன் பக்தராக தியானம் மேற்கொள்ளும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக வேலூரை அடுத்து உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். மத குருமார்களிடமும் ஆசி பெற்றார். இப்பயணத்தில் நடிகை சமந்தா பல கோவில்களுக்கு சென்று வழிபட முடிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.