கடந்த மாதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் வைகை புயல் வடிவேலு ஆகியோரின் அசரதமான நடிப்புடன் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்தின் பக்க பலமாக இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இருந்து வந்தது. உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மாமன்னன். ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்து அப்படத்தை மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் மட்டுமல்லாமல் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தையும் அதில் நடித்த நடிகர்களையும் ரசிகர்கள் வெகு விமர்சியாக இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தில் கொடூர வில்லனாக நடிப்பில் மிரட்டியிருக்கும் பகத் பாசில் இன்று அதிகளவில் பேசப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறார். மேலும் அவருடன் அவருக்கு மனைவியாக நடித்த பிரபல பின்னணி குரல் கலைஞரும் நடிகையுமான ரவீனா வையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாமன்னன் படத்தில் நடிகை ரவீனாவிற்கு பெரிதளவு கதாபாத்திர பங்கு இல்லை. வசனமும் இல்லை. 3,4 காட்சிகளில் மட்டுமே வந்து சிறப்பாக நடித்து கொடுத்திருப்பார். இதையடுத்து ரசிகர்கள் ரவீனா கதாபாத்திரத்தை இணையத்தில் மீம்ஸ்கள் மூலமாகவும் வீடியோக்கள் மூலமாகவும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பாக நடிகை ரவீனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் கதாபாத்திரத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதை நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த ஜோதி எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானவளாக இருப்பாள். மாரி செல்வராஜ், ஃபஹத் ஃபாசிலுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து மேலும், கடந்த 3 நாட்களாக இணையத்தில் வைரலாகும் மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன். படத்தில் வசனமில்லாமலும், குறைவான நேரம் திரையில் தோன்றுவது ஒரு போதும் பிரச்சினையில்லை என்பதை நம்பினேன். உங்களின் அன்பு என்னுடைய நம்பிக்கை சரி, என்பதை நிரூபித்துள்ளது. அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து நடிகை ரவீனா அவர்களின் பதிவு ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loving all the memes and edits , high on that past 3 days. I believed No dialogues n less screen space will never be an issue , I believed in that and now your love has proven I was right ❤️! #maamannan 🖤 Thankyou all! #love 💞 https://t.co/DQvLSG8C2j

— Raveena.S.R (@raveena116) August 2, 2023

எமி ஜாக்சன், ஸ்ரீ திவ்யா, அமலா பால், த்ரிஷா, மஞ்சிமா மோகன் போன்ற தென்னிந்தியாவின் பல பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டவர் நடிகை ரவீனா. அதன் பின் கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து லவ் டுடே, காவல் துறை உங்கள் நண்பன், ராக்கி போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.