தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூர்ணா என்கிற ஷம்னா காசிம். மலையாளத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த த்ரில்லர் திரைப்படமான மஞ்சு போலொரு பெண்குட்டி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து சில மலையாள திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் எம்டன் மகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணைந்த இயக்குனர் திருமுருகன் - நடிகர் பரத் கூட்டணியில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பூர்ணா. தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு & கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்த கந்தகோட்டை, இறுதிச்சுற்று சூரரைப் போற்று படங்களின் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் வெளிவந்த துரோகி, நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்த ஆடு புலி, நடிகர் நந்தாவின் வேலூர் மாவட்டம், இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன், இயக்குனர் கரு பழனியப்பன் இயக்கத்தில் வந்த ஜன்னல் ஓரம், நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்த தகராறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை பூர்ணா நடித்தார். மேலும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சகலகலா வல்லவன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த பூர்ணா தொடர்ந்து மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்கமறு, காப்பான், லாக்கப், பவர் பிளே, சுந்தரி உள்ளிட்ட பல படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமாக இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் உருவான தலைவி திரைப்படத்திலும் நடிகை பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்க, சசிகலா அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஜோசப் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த விசித்திரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூர்ணா தொடர்ந்து தெலுங்கில் நந்தாமுரி பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான அகண்டா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக நடிகர் நானி நடிப்பில் தற்போது தயாராகி வரும் தசரா திரைப்படத்திலும் நடிகை பூர்ணா நடித்து வருகிறார். இதனிடைய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பூர்ணாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துபாயை சார்ந்த பிரபல தொழிலதிபரை நடிகை போர் நான் திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக பூர்ணா தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் நடிகை பூர்ணாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த வளைகாப்பு புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை பூர்ணாவிற்கு பாரம்பரிய முறைப்படி கர்ப்ப காலத்தில் ஏழாவது மாதத்தில் நடைபெறும் சிறப்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் நடைபெறும் இந்த வளைகாப்பு மிகவும் சிறப்பு மிக்கது. நடிகை பூர்ணா தனக்கு ஏழாவது மாதத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நடிகை பூர்ணாவின் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ…