அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லர் கதைகளத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் ‘விடுதலை’ RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க இயக்குனர் வெற்றிமாறனின் 6வது திரைப்படமாக உருவான விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களின் கோலாகல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். முதல் முறை நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஒப்பனிங் பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் சூரி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

அனைவருக்கும் வணக்கம், மூன்று நாட்களாக உங்கள் அன்பான வாழ்த்து வெள்ளத்தில் நனைந்து மிதந்து மகிழ்ந்து வருகிறேன். இறைவனுக்கு நன்றி. விடுதலை முதல் பாகத்தை இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், பொது மக்கள், சமூகவலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பெரும் ஒத்துழைப்பு தந்து மக்களிடம் எங்களின் இந்த படைப்பை எடுத்துச் சென்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் விடுதலை குடும்பம் சார்பாக சிரம் தாழ்ந்த நன்றிகள். அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறோம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பதிவில் வாழ்த்துகளையும் கருத்துகளையும் ரசிகர்கள் பதிவிட்டு அந்த பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.