தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து புகழ்பெற்ற நடிகர் சூரி தற்போது தனது புது பரிமாணத்தை காட்டியிருக்கிறார். ஆம் முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்களோடு கைகோர்த்து நடிகர் சூரி விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக மிகவும் அழுத்தமான காவலராக குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த விடுதலை திரைப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கதையின் நாயகனாக சூரி நடிக்க பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, தமிழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் சிறந்த படைப்புகளாக வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை தான் கொடுத்த திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் வகையில் விடுதலை திரைப்படத்தை செதுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பக் காட்சியில் வரும் எட்டு நிமிட சிங்கிள் ஷாட் ரயில் விபத்து காட்சி ஒன்றே அதற்கு உதாரணம். R.வேல்ராஜின் அற்புதமான ஒளிப்பதிவும் இயக்குனர் ஜாக்சன் அவர்களின் கச்சிதமான கலை இயக்கமும் விடுதலை திரைப்படத்தை இன்னும் தத்ரூபமாக நம்மை உணர வைக்கிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட விடுதலை பாகம் 1 திரைப்படம் கடந்த மார்ச் 31ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தேர்ந்த நடிகராக புது அவதாரம் எடுத்துள்ள நடிகர் சூரியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சூரி ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவருடைய ரியல் பள்ளிக்கூட வாத்தியார் திரு.தமிழரசன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, A,B சொல்லும்போது அது அவருக்கு சுத்தமாகவே வராது. A என்றால் ஏ என (ஏளனமாக) சொல்வார். அதைத்தான் சொல்வார் சினிமாவில் எனக்கு ஆங்கிலம் சுத்தமாக வராது என்று,” என சொல்ல இடையில் குறுக்கிட்ட நடிகர் சூரி நகைச்சுவையாக, “என்ன பண்றது சார் எல்லோருக்கும் நல்ல வாத்தியார் கிடைத்தார்கள்…” என சொல்ல அரங்கமே கைத்தட்டலாலும் சிரிப்பாலும் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய தமிழரசன் ஐயா அவர்கள், “நடக்கும் போது பார்த்தீர்கள் என்றால்?” என பள்ளி பருவத்தில் சூரி நடக்கும் விதத்தை தத்ரூபமாக நடந்து காட்டினார். பின்னர், “இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது. எனக்கு பார்த்த உடனே புல்லரித்து போய்விட்டது.” என்றார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சூரி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் வாத்தியார் தமிழரசன் ஐயா கலந்து கொண்ட முழு வீடியோ இதோ…