விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாக திகழும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக மராத்தியில் 2019ஆம் ஆண்டு ஸ்டார் பரிவார் சேனலில் ஒளிபரப்பான ஆய் குத்தே காய் கர்த்தே என்ற மெகா தொடர் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மலையாளத்தில் இந்த சீரியல் குடும்ப விளக்கு என்ற பெயரில் 2020ல் ரீமேக் செய்யப்பட்டது. இதனை அடுத்து தெலுங்கில் இன்டின்டி குரகலட்சுமி என்ற பெயரில் மற்றும் ஹிந்தியில் அனுப்பமா என்ற பெயரில் அதே 2020 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்ட இந்த மெகா தொடர் தமிழில் பாக்கியலட்சுமியாக வெளிவந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தது. சுசித்ரா செட்டி, சதீஷ்குமார், ரேஷ்மா பசிபுலேட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் பாக்கியலட்சுமி மெகா தொடர் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சூப்பர் ஹிட் மெகா தொடராக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த மெகா தொடரில் கோபி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்துள்ளார். வித்தியாசமான அதே சமயம் வில்லங்கமான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் இந்த கோபி கதாபாத்திரத்தை நடிகர் சதீஷ் குமார் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஹீரோவா அல்லது வில்லனா என்று சொல்லும் அளவிற்கு பல வேரியேஷங்கள் இருக்கும் இந்த கோபி கதாபாத்திரத்திற்கு மட்டுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றும் சொல்லலாம். இந்த நிலையில் பாக்கியலட்சுமி மெகா சீரியல் வெற்றிக்கு மிக முக்கிய பங்காக விளங்கும் நடிகர் சதீஷ் குமார் இதுவரை தான் நடித்து வந்த கோபி கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அனைவருக்கும் வணக்கம்... நான் சொல்லப்போறது, நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம், போன்றவற்றை வர வைக்கலாம். கஷ்டமா இருக்கு, இருந்தாலும் இதை செஞ்சு ஆகணும். இன்னும் கொஞ்ச நாட்களில், அதாவது இன்னும் பத்து பதினைந்து எபிசோடில்.. 'பாக்கியலட்சுமி' சீரியலில் இருந்து நான் விலகுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சதீஷ் ஆகிய நான். கோபியா நடிச்சுக்கிட்டு இருக்கிற இந்த கேரக்டரை விட்டு நான் விலக காரணங்கள் பல இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் பர்சனல் காரணம். இந்த கோபி கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி. நானும் யாருக்கும், எந்த கஷ்டமும் கொடுக்காமல், எல்லோரும் பாராட்டும்படி என்னால் முடிந்தவரை சுமாராக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும், என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்குமாரின் இந்த முடிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இதுவரை சிறப்பாக சதீஷ்குமார் நடித்து வந்த இந்த கோபி கதாபாத்திரத்திற்கு வேறு யார் நடிக்க இருக்கிறார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். சதீஷ்குமாரின் அந்த வீடியோ இதோ…