இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராகவும் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிச்சியமான முகமாகவும் இருந்து வருபவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட்டில் தன் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சய் தத். இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகனாக பல லட்ச ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் பெற்றார். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் 2 படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். பான் இந்திய அளவு பிரபலமான அந்த படத்தில் அட்டகாசமாக நடித்ததையடுத்து தற்போது சஞ்சய் தத் அவர்களுக்கு இந்தி தவிர பல மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது.

அதில் இயக்குனர் அட்லி பாலிவுட்டில் களமிறங்கும் முதல் படமான ஜவான் படத்தில் ஷாருக் கான் நடிக்கும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் தி குட் மகாராஜா எனும் இந்தி படத்திலும், பாப் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் முக்கியமான தமிழில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். முன்னதாக லியோ படத்திற்காக காஷ்மீர் சென்று தனது முதற்கட்ட பாகத்தை முடித்து கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து சென்னை நடக்கவிருக்கும் லியோ படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் சஞ்சய் தத் நடித்து வரும் கேடி படப்பிடிப்பில் குண்டு விபத்து ஏற்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மகடி ரோடு பகுதியில் நடைபெற்று வந்த கேடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்படி குண்டுவெடிப்பு காட்சி படமாக்கப்படும்போது நடிகர் சஞ்சய் தத்தின் மிக அருகாமையில் ஒரு குண்டு வெடித்ததால் அவர் மிகுந்த காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் இதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும் அப்படி எதுவும் எனக்கு நிகழவில்ல. அந்த செய்தி முற்றிலும் உண்மையற்றது. கடவுள் கிருபையால் நான் நலமுடன் ஆரோக்கியமுடன் இருக்கிறேன். நான் கேடி படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறேன். படக்குழு என்னை கூடுதல் பாதுகாப்பாக கவனித்து கொள்கிறார்கள். எனது நலன் குறித்து கவலைப்பட்ட மற்றும் அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் ஆசவாசப்படுத்தி கொண்டு சஞ்சய் தத் பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். கே ஜி எப் படத்தை தொடர்ந்து சஞ்சய் தத் வில்லனாக கன்னடத்தில் நடித்து வரும் கேடி படத்க்ஹில் நடிகர் துருவா சர்ஜா நடித்து வருகிறார். கன்னட சினிமாவில் அடுத்த பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது/