தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரித்வி ராஜ் சுகுமாரன். கண கச்சிதமான நடிப்பை வெளிபடுத்தி திரையில் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ஆச்சர்யப் படுத்தும் சிறந்த நடிகராக பிரித்வி ராஜ் வலம் வருகிறார் . கடந்த 2006 ம் ஆண்டு வெளியான ‘கணா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரித்வி ராஜ். பின் தொடர்ந்து மலையாள திரையுலகிலும் தமிழிலும் ஒருசேர பல படங்களில் நடித்து வந்தார். அதன்படி கடந்த 2007 ல் வெளியான மொழி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரானார் பிரித்வி ராஜ். அதன்பின் பிரித்வி ராஜ் தமிழில், சத்தம் போடாதே, கண்ணாமூச்சு ஏனடா போன்ற படங்களில் நடித்தார். இதில் நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் ஆகிய படங்கள் பிரித்வி ராஜ் தனி வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் தமிழில் குறிப்பிடப்படும் நடிகராகவும் வலம் வந்த பிரித்வி ராஜ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மலையாளத்தில் மட்டும் 6 படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது. அதன்படி தற்போது ப்ரித்வி ராஜ் ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ‘லூசிபர்’, ‘ப்ரோ டேடி’ போன்ற வெற்றி படங்களை இயக்கி கவனிக்கத்தக்க இயக்குனராகவும் வலம் வருகிறார்.

இதனிடையே பிரித்வி ராஜ் மலையாளத்தில் ‘விளையாத் புத்தா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் தற்போது பிரித்வி ராஜிற்கு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மறையூர் பகுதியில் விளையாத் புத்தா படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக பிரித்வி ராஜிற்கு விபத்து நேர்ந்துள்ளது. இதனால் அவரது கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கொச்சி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக படக்குழுவினர் அனுமதித்துள்ளனர். காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு நாளை முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்தி அறிந்து ரசிகர்கள் வருத்தமடைந்து பிரித்வி ராஜ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனைகள் செய்து வருகின்றனர்.

பிரபல மலையாள இயக்குனர் சாச்சி தனது கனவு படமாக விளையாத் புத்தா படத்தின் போதே கடந்த 2020 ல் உயிரிழந்து விட்டார். இதையடுத்து இயக்குனர் ஜெயன் நம்பியார் இப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். ஊர்வசி தியேட்டர் தயாரிக்கும் இப்படம் 50 நாள் மறையூர் பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். அதன்படி படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் பிருத்விராஜிற்கு அடிப்பட்டுள்ளதால் இதன் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.