கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகி படிப்படியாக தன்னை மெருகேற்றி, அனைத்து தரப்பு ரசிகர்களின் இதயங்களையும் கவரும் சிறந்த நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டு பாலிவுட் சினிமாவிலும் நடிகராக தடம் பதித்து தற்போது ஹாலிவுட் வரை வளர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் படத்திற்கு படம் பல வித்தியாசமான கதாபாத்திரங்களையும் பல்வேறு விதமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இதனிடையே முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி (SIR) திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடைபெற உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ரசிகர்கள் முன்பு தனுஷ் பேசும்போது பயன்படுத்தும் “எண்ணம்போல் வாழ்க்கை” எனும் வாக்கியத்தை கொண்டு தொடங்கும் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வாத்தி இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…