தமிழ் திரைத்துறையில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் நடிகர் பாலா சிங். எந்தவொரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கும் திறன் கொண்டவர். நாசர் இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து இவரின் நடிப்புக்கு சீரான வரவேற்பு கிடைத்ததால், அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் வர துவங்கின. மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் குணசித்திர பாத்திரம், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அந்த வகையில் இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு சில தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால், இவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாலாசிங்கின் மரணம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் பாலா சிங் இருப்பார் என்று கூறினால் மிகையாகாது.