கோலிவுட் மற்றும் டோலிவுட் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் சிவகார்த்திகேயன் களமிறங்க உள்ளதாக நடிகர் அத்வி ஸேஷ் அறிவித்திருக்கிறார். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து சிவகாரத்திகேனின் அசத்தலான படங்கள் மக்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இதையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை கடந்து தற்போது ஹிந்தி சினிமாவிலும் சிவகார்த்திகேயன் களமிறங்குவதாக அட்டகாசமான தகவல் வெளிவந்துள்ளது.

தமிழில் மாவீரன் மற்றும் தெலுங்கில் மகாவீருடு என ஒரே தினத்தில் வெளியாகும் இப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளும் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று ஜூலை 8ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற மஹாவீருடு படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகர் அத்வி ஸேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். “தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி சினிமாவில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு சினிமாவிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார். மகாவீருடு படம் பார்க்க உற்சாகமாக காத்திருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டு பேசிய நடிகர் அத்வி ஸேஷ் “இவர் பெரிய நட்சத்திரம் மட்டுமல்ல பெரிய இதயம் கொண்ட பெரிய நட்சத்திரம். தெலுங்கு சினிமா மட்டுமல்ல தற்போது இவர் ஹிந்திலும் அடுத்ததாக அறிமுகமாக இருக்கிறார்” என சிவகார்த்திகேயனின் பாலிவுட் என்ட்ரி குறித்து பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளது. அந்த ஹிந்தி திரைப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.