இசை ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த இசை நிகழ்ச்சியின் புதிய தேதியை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்திய சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்கு இடைவிடாது சிறந்த இசையை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த 2023 ஆம் ஆண்டிலும் சிலம்பரசன்.TR - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல, இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மிப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க, கடந்த ஜூன் மாத இறுதியில் ரிலீஸான மாமன்னன், ஆகிய படங்களில் தனது இசையால் மக்கள் மனதை வென்றவர்.

அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமாக இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வரும் அயலான் படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான மொய்தீன் பாய் எனும் கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படத்திற்கும் இசை அமைத்து வருகிறார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜீனி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் மணிரத்தினம் காம்பினேஷனில் வர இருக்கும் KH234 படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மௌனப்படமான காந்தி டாக்ஸ், தனுஷ் நடிக்கும் ஹிந்தி படமான தேரே இஷ்க் மெயின் ஆகிய படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார். இதனிடையே தொடர்ச்சியாக தனது இசை நிகழ்ச்சிகளையும் உலகம் முழுக்க நடத்தி வரும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தனது மறக்குமா நெஞ்சம் எனும் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் இசைப்புயலில் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால் திடீர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை! இவ்வளவு பொறுமையாக அன்போடு காத்திருந்ததற்கு நன்றி! நமது நிகழ்ச்சியின் புதிய தேதி செப்டம்பர் 10! அதே டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஸ்பெஷலான மாலைப் பொழுதில் இணையுங்கள்!" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் அந்த பதிவு இதோ…