நடிகை பறவை முனியம்மா இறந்துவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

தமிழில் “தூள்” உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததின் மூலம் நடிகையாகவும், பாடகியாகவும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பறவை முனியம்மா.

கடந்த சில மாதங்களாகப் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தனது சொந்த ஊரிக்கே திரும்பி உள்ளார். இந்நிலையில், வறுமையில் வாடிய அவருக்கு, கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில், நேற்று அவர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில், நடிகர் அபி சரவணன் மூலம் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவர் இறந்துவிட்டதாக சில தனியார் தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக நடிகர் அபி சரவணன் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசுகையில், “பறவை முனியம்மா உயிரோடு இருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்” விளக்கம் அளித்தனர். மேலும், பறவை முனியம்மாவின் பேரன் அவருடன் இருந்து, பறவை முனியம்மாவை கவனித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, நடிகர் அபி சரவணன் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பறவை முனியம்மா அவர்கள் உயிரோடு இருப்பதாகவும், அவர் உயிரிழந்துள்ளதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.